Thursday, December 20, 2007

வாழ்க்கையைச் சொல்லும் `வாழ்த்துக்கள்' - சீமான்

....
சினிமாவில் வியாபார அணுகுமுறையுடன் கொஞ்சமாவது சமூக அக்கறையும் வேண்டும் என்று கவலைப்படும் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் சீமான். 'தம்பி' வெற்றிப் படத்துக்குப் பின் இப்போது 'வாழ்த்துக்கள்' வழங்க தயாராகிவிட்டார்.இனி சீமான்...!
.
'தம்பி'க்கும் 'வாழ்த்துக்கள்' படத்துக்கும் என்ன வேறுபாடு...?

சுருக்கமாகச் சொல்லணும்னா `தம்பி' கோபக்கார பயல். `வாழ்த்துக்கள்'ல வர்ற கதிரவன் பாசக்காரப் பயல். தம்பியில் எந்த அம்மாவ அடிச்சாலும் நான் அடிப்பேன்னு கொதிக்கிறவனைப் பார்த்திருப்பீங்க.இந்த கதிரவன் ரொம்ப அன்பானவன். உங்க பக்கத்துல தோள் மேல கை போட்டுப் பேசுறவன். தோழமையோடு கைகொடுக்கிறவன்.

கதையில் என்ன சொல்ல வருகிறீர்கள்?

இன்னைக்கு நாகரிகம்கிற பேர்ல நகரத்துல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்காம அன்பு காட்டாம தனித்தனி தீவா பிரிஞ்சு கிடக்குற அவலத்தைச் சொல்றேன். பக்கத்து வீட்டுல கொலை நடந்தாலும் தெரியலை. கொள்ளை நடந்தாலும் தெரியலை. இன்னைக்கு அடுக்கு மாடி குடியிருப்புல எத்தனை பேருக்கு பக்கத்து வீட்டுக்காரன் பெயர் தெரியும்.

என்னடா வாழ்க்கை இது... இப்படிப்பட்டதுதான் வாழ்க்கைன்னு எதிர்காலத்துக்கு கத்துக் கொடுத்துட்டு இருப்பது கொடுமை. கிராமத்துல இந்தக் கேவலம் இல்லை. வீடு தூரம் தூரமா பிரிஞ்சு கிடந்தாலும் ஒருத்தருக்கு ஒண்ணுன்னா ஓடி உதவுறாங்க. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு உலகமே தன் ஊரா பரந்த மனத்தோட பாடியவன் தமிழன். யாவரும் கேளிர்னு எல்லா மக்களையும் தன்சொந்தங்களா பார்த்தவன் தமிழன். ஆனா இன்னைக்கு...?
.
இந்தக் கோபத்தை தான் படத்தில் வெளிப்படுத்துகிறீர்களா?
.
கோபம்னு சொல்றதை விட இயல்பானதைச் சொல்றேன். கோடிக் கோடியா பணம், பெரிய வீடு, இயந்திரம் மாதிரி உழைப்பு, ஓய்வில்லாம ஓட்டம், அவசரம் அவசரம்னு பறக்கிறோம். இவ்வளவு ஓடி திரும்பிப் பார்த்தால்... என்ன மாதிரி வாழ்ந்திருக்கோம்னா வெறுமையா இருக்கு. இது ஒரு வாழ்க்கையான்னு தோணுது.இப்படித்தான் வாழணும்னு சொன்னவன் யாரு? அன்பு, பாசம், மனசாட்சி எல்லாத்தையும் காவு கொடுத்துட்டு மனிதநேயமே இல்லாம மனிதனை மதிக்காத வாழ்க்கை வாழ்வதில் என்ன அர்த்தம்... இருக்கு? இந்த மனிதநேயம் எங்க போச்சுன்னு கேட்கறேன். வாழ்க்கைல உறவுகள் இல்லாத நிலை தேவையா...?உறவுகள்தான் வாழ்க்கைக்கு உயிர்னு சொல்றேன். அப்படிப்பட்ட உறவுகளின் பெருமையை சொல்ற படம்தான் `வாழ்த்துக்கள்'.
.
இது ஒரு வியாபார சினிமாதானே...?
.
இது முழுக்க முழுக்க வியாபார சினிமாவுக்குள்ள அத்தனை அம்சங்களோடத்தான் இருக்கு. நல்லதைச் சொன்னா கெட்ட சினிமா மாதிரி பார்க்கிற பார்வை இருக்கு.இதுல வியாபாரத்துக்கான எல்லாமும் இருக்கு. ஆனா ரசிகனை முட்டாளாக்கி அவமானப்படுத்துற நம்ப முடியாத இயல்புக்கு மாறான விஷயங்கள் இருக்காது. நம்புறமாதிரி நல்லதைச் சொல்லி இருக்கேன். இப்படித்தான் வாழ்க்கை இருக்கணும்னு உங்க மனசை ஏங்க வைக்கும்படி படம் இருக்கும்.
.
இது ஒரு காதல் கதையா?
.
படத்துல காதல் இருக்கும். கதிரவன் துறுதுறுப்பான இளைஞன். அவனைக் காதலிக்கிற பெண்தான் பாவனா. காதல்னா கண்டவுடன் காதல் ரகமல்ல. காதலுக்கு புரிதல் எவ்வளவு முக்கியம்னு படத்தைப் பார்த்தால் புரியும். பத்துப் பொருத்தம் பார்த்து வச்சு கல்யாணம் பண்ணினவங்களும் பாதியில பிரிஞ்சுடறாங்க.காதலிச்சு ஒண்ணு சேர்ந்தவங்களும் கொஞ்ச நாள்ல விவகாரத்துக்கு நிற்கறாங்க. ஏன் சரியான புரிதல் இல்லை. இதைத்தான் படத்தில் அழகா சொல்லி இருக்கேன். காதல், வாழ்க்கை எல்லாமே விளையாடுத்தனமா போய்க்கிட்டிருக்கிற அவலத்தை எச்சரிக்கையா சொல்லி இருக்கேன்.
.
இயக்குனரா இருந்துகொண்டு இன்னொரு பக்கம் நடிப்பில் இறங்கிவிட்டீர்களே... 'பள்ளிகூடம்', 'எவனோ ஒருவன்' இப்படி?
.
அது நண்பர்களுக்காக பண்ணியது. அந்தப் படங்கள் நல்ல படங்கள். பேசக்கூடிய படமா இருந்ததால நடிச்சேன். நல்ல படத்துல எந்த மாதிரியான விதத்திலாவது பங்கெடுப்பது மனசுக்கு சந்தோஷம் தரும் விஷயம்.
..
மாதவனை அடுத்த படத்திலும் நாயகனா ஆக்கியிருப்பது பற்றி...?
.
எனக்கும் மாதவனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. எப்படியாவது தன் படம் ஓடினால் போதும்னு நினைக்கிற சுயநல நடிகரல்ல அவர். நல்ல படத்துல நடிக்கணும்கிற ஆர்வமும் துடிப்பும் உள்ளவர்.அது எனக்குப் பிடிச்சிருக்கு. எந்தவித நடிப்பும் இல்லாம சகோதரர் போல பழகுறவிதம் இது எனக்குப் பிடிச்சு எங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்கு. அதனால தொடர்ந்து எங்கள் கூட்டணி தொடருது.

0 comments:



add

Your Ad Here

தோழமைகள்